கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பயன்பாடின்றி இலவச வண்ணத் தொலைக்காட்சிகள்
By DIN | Published On : 29th January 2019 01:23 AM | Last Updated : 29th January 2019 01:23 AM | அ+அ அ- |

தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்காமல் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், அவை பயனற்ற நிலையில் சேதமடைந்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
திமுக ஆட்சியின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பொட்டிகள் வழங்கப்பட்டன. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கேற்ப வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டன. ஆனால், 2010 மே மாதத்துக்குப் பிறகு பெறப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் வருவாய்த் துறையினரால் வழங்கப்படவில்லை.
இதனால், மொத்த ஒதுக்கீட்டின்படி பெறப்பட்ட தொலைக்காட்சிகள் முழுமையாக அனைத்துப் பயனாளிகளுக்கும் வழங்காததால், அவை வட்டாட்சியர் அலுவலகங்களிலேயே தேங்கின. தற்போது, ஆயிரக்கணக்கான தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்பாடின்றி சேதமடைந்த நிலையில், கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மலை போல் குவிந்து கிடக்கின்றன. எனவே, இந்த பயன்பாடற்ற தொலைக்காட்சிப் பெட்டிகளை, ஆதரவற்றோர் இல்லம், ஐ.டி.ஐ., ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பயன்பாட்டுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.