பரமக்குடியில் ஜமாபந்தி: 602 மனுக்கள் மீது விசாரணை
பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த வருவாய் தீர்வாயக் கணக்குகள் குறித்த தணிக்கையில் 602 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பார்த்திபனூர், பரமக்குடி, மஞ்சூர், நயினார்கோவில், கிளியூர், போகலூர் ஆகிய 6 உள்வட்டங்களைச் சேர்ந்த 91 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் குறித்த தணிக்கை, ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி 29 வரை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோபு தலைமையில், வட்டாட்சியர் சரவணன், தலைமையிட துணை வட்டாட்சியர் முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட துணை வட்டாட்சியர் முருகவேல், உதவியாளர் விஜயலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த வருவாய் கிராம மக்கள் தங்களது பட்டா மாறுதல், நில உடைமைகள், முதியோர் உதவித்தொகை, பயிர் சாகுபடி கணக்கு ஆகிய கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அவர்களிடமிருந்து 602 மனுக்கள் பெறப்பட்டதில், 24 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.