குடிக்கத் தண்ணீரும், வாழ்வாதாரத்திற்கு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சீனாங்குடி கிராமத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்து வேண்டிக்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் கண்மாய் பகுதியில் அமைந்துள்ளது சீனாங்குடி கிராமம். இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால், இக்கிராமத்திற்கு நேரடியாக காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் இணைப்பு இல்லை. மேலும், கிராமத்தில் நிலத்தடி நீர் போதிய அளவுக்கு இருந்தும், அதில் உப்பு கலந்த நீர் அதிகம் வருவதாக கூறப்படுகிறது. இதனால், அதையும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நூறு நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படாததால், ஊதியமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தங்களது கிராமத்துக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் (ஆர்.ஓ.பிளாண்ட்) அமைத்துத் தரவும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் வழங்கவும் வேண்டும் என வலியுறுத்தி மனு வை கொடுத்துச்சென்றனர்.
ஒரே கோரிக்கைக்கு 11 ஆவது மனு: ஆர்.எஸ்.மங்களம் பகுதியில் உள்ளது வ.பரமக்குடி. இந்த ஊரில் கடந்த 5 ஆண்டுகளாகவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை. இதனால், குடிநீரின்றி அப்பகுதி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை 10 முறை மனு அளித்த நிலையில், தற்போது 11 ஆவது முறையாக மனு கொடுப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.