வராத காவிரி கூட்டுக் குடிநீருக்கு மாதம் ரூ.27 ஆயிரம் கட்டணம்: ஊராட்சி நிதி வீணடிப்பு
கமுதி அருகே 6 மாதத்திற்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படும் காவிரி குடிநீருக்கு மாதம் ரூ.27 ஆயிரம் குடிநீர் கட்டணத்தை செய்யாமங்கலம் ஊராட்சி நிர்வாகம் செலுத்தியுள்ளது.
கமுதி - பார்த்திபனூர் செல்லும் வழியில் பிரதான சாலையியிருந்து 2 கி.மீ., தூரமுள்ள செய்யாமங்கலத்தில் 680 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊருக்கு காவிரி குடிநீர் 6 மாதத்திற்கொருமுறை, சில மணிநேரங்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால் இப்பகுதியிலுள்ள மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரையும், 16 கிமீ., தூரம் பயணித்து, அபிராமத்திலிருந்து இரு சக்கர மற்றும் சரக்கு வாகனங்களில் சென்று குடம் தண்ணீர் 20 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்யாமங்கலத்திற்கு 6 மாதத்திற்கொருமுறை காவிரி குடிநீரை விநியோகம் செய்துவிட்டு, மாதக் கட்டணமாக ரூ.26 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை மாதந்தோறும் கட்டண நிர்ணம் செய்கின்றனர். இது போல் கடந்த 5 ஆண்டுகளில், செய்யாமங்கலம் கிராமத்திற்கு மட்டும் ரூ.4 லட்சத்துக்கு மேல், ஊராட்சி நிதியை வீணாக அரசுக் கணக்கில் செலுத்தியது தெரியவந்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் விசாரணை செய்து, அப்பகுதியில் முறையாக காவிரி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.