கமுதி-அருப்புக்கோட்டை செல்லும் வழியில் சாலையின் நடுவே சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து, தினமணி நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை சேதமைடைந்த பகுதி சீரமைக்கப்பட்டது.
கமுதி -அருப்புக்கோட்டை செல்லும் ஒரு வழிச்சாலையை இருவழிச் சாலையாக மாற்றி சீரமைக்கபட்டது. இதனால் கமுதி அருகே சேதுராஜபுரம் விலக்கு சாலை அருகே கால்வாயின் குறுக்கே சிறு பாலம் இருந்தது. இந்த சாலையினை அகலப்படுத்தும்போது, குறுகலான பாலம் அகலப்படுத்தப்பட்டு, இருவழிசாலையாக மாற்றப்பட்டது. ஆனால் பாலம் அமைக்கப்பட்ட சில வாரங்களிலேயே, சாலையின் குறுக்கே உள்ள பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, விபத்து அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் சீரமைக்கப்பட்டது. இதனால் விபத்து அபாயம் நீங்கியது.