திருவாடானை அருகே மாயமான இளைஞரை போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
திருவாடானை அருகே சிறுவண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பன் மகன் திருப்பதி (37). இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திருப்பதி தனது குடும்பத்துடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தங்கி ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் செல்வதாகக் கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லவில்லையாம். அவரது செல்லிடப்பேசி இணைப்பும் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து திருப்பதியின் தாய் காளியம்மாள் (70) திங்கள் கிழமை இரவு திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.