ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வித் தொலைக்காட்சியை ஒளிபரப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யண்ணன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியை பள்ளிகளில் ஒளிபரப்பும் வகையில் கேபிள் இணைப்பு பெறவும், "செட்டாப் பாக்ஸ்' அமைக்கவும், தொலைக்காட்சி இல்லாத பள்ளிகளில் தொலைக்காட்சி வைக்கவும் அறிவுறுத்தினார்.
கல்வித் தொலைக்காட்சிக்கான இணைப்பு பெறுவது குறித்து வட்டாட்சியர் ச.செந்தில்குமார் விளக்கினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.காந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.