ராமேசுவரம் நகராட்சி பகுதிக்கு தேவையான அளவிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், தனியார் குடிநீர் லாரிகளில் குடம் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்றவாறு நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் குடிநீர் கட்டணத்தை அவ்வப்போது உயர்த்தி வருகின்றனர்.
ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.10 க்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் குறைந்தளவு குடிநீர் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது ஏராளமான குடிநீர் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன.
மேலும் குடிநீர் கட்டணத்தை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் விற்பனை செய்துவரும் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.