திருவாடானை அருகே தளிர்மருங்கூர் ஊராட்சிக்குள்பட்ட அமரன்வயல் கிராமத்தில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமரன் வயல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்துக்குள் வரும் சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், எந்தவித பராமரிப்பும் இல்லாததால், குண்டும் குழியுமாக மண் சாலையாக மாறிவிட்டது.
இச்சாலை வழியாகத்தான் அருகே உள்ள திருவாடானை, தொண்டிக்கு செல்லவேண்டும்.
மழைக் காலங்களில் சேரும் சகதியுமாக மாறிவிடும் இச்சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.