ராமநாதபுரம், ஜூலை 12: ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்றதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் நகரில் கஞ்சா விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் பஜார் காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீஸார் நயினார்கோவில் சாலையில் உள்ள நீலகண்டன் ஊருணி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீஸார் ஆட்டோவில் இருந்தவர்களைச் சோதனையிட்டதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் சீனிபாபு (29), கெளதம் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.