பாதுகாப்புக்கு போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால், ராமநாதபுரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஜூலை 25, 26 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகரிலுள்ள 40 அடி சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் 20 அடியாக சுருங்கிவிட்டன. இதனால், போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிரமமின்றி செல்லும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை 11, 12) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நகர் முழுவதும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திடீரென தள்ளிவைக்கப்பட்டது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறியது:
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவது அவசியம். ஆனால், வீரன் அழகுமுத்துகோன் விழா மற்றும் காஞ்சிபுரம் அத்திரவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு ராமநாதபுரத்திலிருந்து ஏராளமான காவலர்கள் சென்றுவிட்டனர்.
இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு போதிய காவலர்கள் இல்லை என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது ஜூலை 25, 26 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றனர்.
ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் போதிய காவலர்கள் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்பு அகற்றுவதிலிருந்து நகராட்சி பின்வாங்காது என, நகராட்சி ஆணையர் க. சுப்பையா தெரிவித்தார்.