ராமேசுவரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பல மணி நேரம் மின் தடை ஏற்படுவதைக் கண்டித்து நகர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையம் முன் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இன்சுலேட்டர் பீங்கான் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் கடந்த ஒரு வாரமாக 12 முதல் 19 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. இதனை சீரமைக்க மின்வாரியத்தில் தொழில் நுட்பப் பிரிவு ஊழியர்கள் பற்றாக்குறையால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு ராமேசுவரம் மற்றும் மண்டபம் துணை மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மீண்டும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 12 மணிநேரம் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவில் ஏற்படும் மின்தடையால் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, ராமேசுவரம் நகர் திமுக சார்பில் தொடர் மின் தடையை கண்டித்து பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக நிர்வாகி தியாகராஜன் தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் நாசர்கான், மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர்.
இதில் நகரப் பொறுப்பாளர்கள் எம்.எம்.கருப்பையா, ஏ.கே.என்.சண்முகம், வே.பாண்டி, இளைஞரணி செயலாளர் முனீஸ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ராஜபாண்டி, ஏ.ஆர்.முனியசாமி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.