திருவாடானை தாலுகா விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக சிறுதானியங்கள் மற்றும் பயிறு வகைப் பயிர்களை சாகுபடி செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை வட்டாரம் திகழ்கிறது. இங்கு 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நெல்லுக்கு மாற்றுப் பயிராக சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, குதிரை, வாலி, சோளம் போன்ற பயிர்களையும் பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.
இதற்கு நெற்பயிரை விட குறைந்த தண்ணீர் போதுமானது. எனவே அனைத்து விவசாயிகளும் இந்த தானிய பயிர்களை சாகுபடி செய்து பலன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.