கமுதியில் பள்ளி நாள்களில் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளனர்.
அதில், கமுதியில் நாடார் பஜார், முத்துமாரியம்மன் கோவில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி முடியும் வேளையில் மாணவர்கள் சாலையை கடக்க முடியாத அளவுக்கு கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் செல்வதாலும், சாலையின் இரு புறமும் தனியார் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாலும், அச்சத்துடன் மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்கின்றனர்.
எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி கமுதி காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு, பள்ளி நாள்களில் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் போலீஸாரை நியமித்து வாகன போக்குவரத்தை சீராக்கி, மாணவர்கள் பாதுகாப்பான முறையில் சாலையைக் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.