திருவாடானை அருகே மாணவியின் சடலத்தை பொது மயானத்தில் புதைக்க செவ்வாய்க்கிழமை ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
திருவாடானை அருகே உள்ள ஓரியூரைச் சேர்ந்த தொண்டிராஜ் மகள் அமுதா (15). 10 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, உடல் நிலை சரியில்லாமல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திங்கள்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அமுதாவின் சடலத்தை ஓரியூரில் கிறிஸ்துவ ஆலயம் முன்பு உள்ள பொது மயானத்தில் புதைக்க இருந்தனர். அங்கு புதைக்க ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டது.
தகவலறிந்து திருவாடானை வட்டாட்சியர் சேகர், எஸ்.பி.பட்டினம் காவல் துறை சார்பு ஆய்வாளர் முத்துராமலிங்கம், தனிபிரிவு சார்பு ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சமரசப் பேச்சு நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து மாணவியின் சடலம் அதே மயானத்தில் புதைக்கப்பட்டது.