கீழக்கரை அருகே சடை முனியன் வலசை கடற்கரையில் கரை ஒதுங்கிய 600 கிலோ பீடி இலைகளை காவல்துறையினர் செவ்வாய்கிழமை கைப்பற்றினர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் கடத்தலை தடுக்க மத்திய, மாநில உளவுத்துறை, கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை வாலிநோக்கம் கடற்கரையில் ஒதுங்கிய 80 கிலோ பீடி இலை மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஏர்வாடியை அடுத்துள்ள சடைமுனியன் வலசை கிராமத்தில் 15 பீடி இலை மூட்டைகள் கரை ஒதுங்கி உள்ளதாக மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தேவிபட்டினம் காவல் துறையினர் 15 மூடைகளில் இருந்த 600 கிலோ பீடி இலைகளைக் கைப்பற்றினர்.
இவை இலங்கைக்கு கடத்துவதற்கு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து தனிப்படை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.