ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை தண்ணீர் லாரி மோதி நில அளவைத்துறை ஆய்வாளர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அரண்மனைப் பகுதி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் நில அளவைத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவர் பணி நிமித்தமாக வெள்ளிக்கிழமை பகலில் மோட்டார் சைக்கிளில் பாரதிநகர் பகுதிக்குச் சென்றார். பின்னர் அவர் பட்டணம்காத்தான் எல்லைப் பகுதியில் ராமேசுவரம் சாலையில் திரும்பினார். அப்போது ராமநாதபுரம் நோக்கி வந்த தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ராஜேந்திரன் உயிரிழந்தார்.
இதில் மோட்டார் சைக்கிள் சாய்ந்ததில் அதிலிருந்த ஆவணங்கள் சிதறின. அதனடிப்படையிலேயே ராஜேந்திரன் அடையாளம் காணப்பட்டார். விபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த கேணிக்கரை போலீஸார் லாரி ஓட்டுநர் முனியசாமியை கைது செய்தனர்.