உச்சிப்புளி அருகே பைக்குகள் மோதல்: இளைஞர் உள்பட இருவர் சாவு
By DIN | Published On : 04th March 2019 07:34 AM | Last Updated : 04th March 2019 07:34 AM | அ+அ அ- |

உச்சிப்புளி அருகே இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை இரவு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், மகன் கண் முன்னே தந்தையும், மற்றொரு இளைஞரும் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தாமரைக்குளம் அடுத்துள்ள மேலமண்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்குமார் (45).
இவரது மகன் பிரவீண் (14). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அம்மாபட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ரஞ்ஜித் (18) என்பவரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். மேலமண்குண்டு சாலை வளைவில் இந்த 2 இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், மகன் கண் முன்னே கந்தன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேநேரம், பலத்த காயமடைந்த ரஞ்ஜித்தும் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த பிரவீண் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்சாமுவேல் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.