திருவாடானை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் மூத்த வழக்குரைஞர் சிவராமன், வழக்குரைஞர் சங்கத் தலைவர் நாகராஜன், சங்கச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் திருவாடானை, தொத்தார்கோட்டை, மங்கலக்குடி ஆகிய கிராமங்களிலிருந்து மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமில் நீதிபதி பாலமுருகன் பேசியது: பெண்கள் விழிப்புணர்வுடனும் சட்ட, திட்டங்களைத் தெரிந்தும், தங்களது சுய முயற்சியில் முன்னேறி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். குழந்தை திருமணத்தை அறவே ரத்து செய்ய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம் என்றார்.
விழாவில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.