கமுதி அருகே பயன்பாடின்றி, இடிந்து விழும் நிலையிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கமுதி அருகே கண்ணார்பட்டி அருப்புக்கோட்டை , திருச்சுழி மும்முனை சாலை சந்திப்பில் 1998 இல், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 32 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு, அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாமல், இவ் வீடுகள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால், ஊழியர்கள், வீடுகளை விட்டு கடந்த 2017 இல், வெளியேறினர். இதன் காரணமாக இவ்வீடுகளில் பயன்பாடின்றி இருந்த மின் மீட்டர், குடிநீர் இணைப்பு பெட்டிகள், தளவாட சாமான்கள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் ஆகியன சேதமடைந்து சாலையோரத்தில் கிடக்கின்றன.
இதனால் இவ்வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் பயன்பாடின்றி இடிந்து விழும் நிலையிலுள்ள இவ் வீடுகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.