கமுதி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசு நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 வழங்கியதை அடுத்து, மருத்துவமனையிலிருந்து 8 நாள்களுக்கு பின் திங்கள்கிழமை சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
கமுதியை அடுத்துள்ள அபிராமம் அருகே டி. வல்லக்குளத்தைச் சேர்ந்த மாயாண்டி மகள் ராதிகா (22). இவர், கடந்த ஏப்ரல் 29 இல் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அபிராமம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
அப்போது, ராதிகா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவரது குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கவேண்டும் எனக் கோரி, கடந்த 7 நாள்களாக ராதிகாவின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். இந்நிலையில், ராதிகாவின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, அபிராமம் போலீஸார் கடந்த சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், கொலையான ராதிகாவின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்துக்கு காவல் துறை பரிந்துரை செய்தது. அதையடுத்து, மாவட்ட நிர்வாகம் ராதிகாவின் குடும்பத்துக்கு ரூ. 4,12,500-க்கான காசோலையை வழங்கியது.
நிவாரணத் தொகையை, கமுதி காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், வட்டாட்சியர் கல்யாணகுமார் ஆகியோர், இறந்த ராதிகாவின் தாயார் கஸ்தூரியிடம் வழங்கினர்.
அதன்பின்னர், 8 ஆவது நாளான திங்கள்கிழமை ராதிகாவின் சடலத்தைப் பெற்றுச் சென்ற உறவினர்கள், அபிராமம் அருகே டி.வல்லக்குளத்தில் அடக்கம் செய்தனர். இதனால், 8 நாள்களாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.