திருவாடானை சன்னிதி தெருவில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் சாமி தூக்கி வருவதில் சிக்கல் ஏற்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
திருவாடானையில் உள்ள சன்னிதி தெருவில் மளிகை கடை, பூக்கடை, காய்கறிகடை மற்றும் பழக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளன. எனவே இங்கு வரும் பொது மக்களும் வாடிக்கையாளர்களும் தங்களது இரு சக்கர வாகனங்களை ஆங்காங்கே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும் தற்போது ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா நடைபெறும் நிலையில் காலை மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம்.
இப்படி சுவாமி வீதி உலா வரும்போது சன்னிதி தெருவில் இரண்டு பக்கமும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் சுவாமி தூக்கிவருவதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. புதன்கிழமை காலை நாட்டார்கள் ஊர்வலமாக தூக்கிவந்தபோது சன்னிதி தெருவில், இடையூறாக நின்ற இரு சக்கர வானத்தை தள்ளி வைத்தனர்.
அப்போது வாகனத்தின் உரிமையாளர் தட்டிக்கேட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. எனவே சன்னிதி தெருவில் வாகனத்தை நிறுத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து இது போன்ற திருவிழா நாள்களிலாவது இடையூறு இல்லாமல் இரு சக்கர வாகனத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.