பரமக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அனல் காற்றுடன் கடுமையான வெயில் வாட்டி எடுத்தது. கடந்த புதன், வியாழன் ஆகிய 2 தினங்களாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 1 மணியளவில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் செல்லும் வாருகால் முறையாக பராமரிக்கப்படாததால் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பலத்த சூறைக்காற்று வீசியதால் ஆற்றுப்பாலம், நகராட்சி அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சாரக் கம்பிகளில் மரங்கள் சாய்ந்ததால், 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்தன. இதனால் பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி, மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.