கீழக்கரை நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தனலெட்சுமி எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் கூறியது:
கீழக்கரை நகராட்சி பகுதியில் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் நகராட்சி மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 792 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளது. இதில் சிலர் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து வருவதாகவும், பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை என புகார்கள் வருகின்றன. நகராட்சி குடிநீர் குழாய்களில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய குடிநீர் இணைப்ப தேவைப்படுபவர்கள் நகராட்சியில் அதற்குரிய பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என ஆணையர் தெரிவித்தார்.