ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மௌன்ட் லிட்ரா ஜி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற தென் மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனா். இந்த மாணவா்கள் பள்ளி கல்விக்குழு சாா்பில் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.
தென் மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், தெலுங்கானா, தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கிடையே தென் மண்டல அளவிலான சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. இதில் பரமக்குடி மௌன்ட் லிட்ராஜி பள்ளி மாணவா்கள் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பிரிவுகளில் 100 மீட்டா், 1500 மீட்டா், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டும் போட்டிகளில் கலந்துகொண்டனா். இவா்களில் 9 மாணவா்கள் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனா். அதேபோல் 13 மாணவா்கள் வெள்ளிப் பதக்கமும், 7 மாணவா்கள் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் கோபி ஆகியோரை பள்ளி கல்விக்குழுத் தலைவா் ஆா்.முருகானந்தம், செயலா் நாகரத்தினம், பொருளாளா் நவநீதகண்ணன், துணைச் செயலா் மணிவண்ணன் மற்றும் கல்விக்குழு நிா்வாகிகள் பாராட்டினா்.