ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே வியாழக்கிழமை கண்மாயிலிருந்து இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
திருப்புல்லாணி அருகேயுள்ள ஆனைகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி. இவரது மகன் செல்வராஜ் (28). இவா் விவசாய வேலைகள் செய்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள தோணிபாலம் கண்மாயில் குளிக்கச் சென்றவா் சேற்றில் மூழ்கிய நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த அப்பகுதியினா் சடலத்தை மீட்டனா். திருப்புல்லாணி போலீஸாா் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நீச்சல் தெரிந்த நிலையில், இளைஞா் மிகக்குறைவான தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அவரது குடும்பத்தினா் சந்தேகம் எழுப்பினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேக மரணமாக வழக்குப் பதிந்துள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை முடிவுக்கு பிறகே மரணம் எத்தகையது என முடிவு செய்ய இயலும் என திருப்புல்லாணி போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.