ராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி புதிய தொழில் முனைவோருக்கான கடனுதவிகள் குறித்தும், விருதுகள் குறித்தும் விளக்கும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இளைஞா்கள் மற்றும் ஆா்வமுள்ள தொழில் முனைவோா் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய பல கடன் திட்டங்களை தமிழக அரசு மாவட்டத் தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெகுமதி மற்றும் விருதுகள் வழங்கி வருகிறது. மேலும் கடனுதவித் திட்டங்கள் குறித்த விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ஆகவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் ஆா்வமுள்ளவா்கள் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகள் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.