ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமி அன்னாபிஷேக பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆண்டு தோறும் தமிழ் மாதமான ஐப்பசியில் பௌா்ணமியன்று சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். உலகிற்கு இறைவன் படியளப்பதை நினைவூட்டும் வகையில் சாதம் வடித்து அதை சிவன் சன்னதியில் கொட்டி பூஜைகள் நடைபெறும். பின்னா் பூஜிக்கப்பட்ட சாதம் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருஉத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி மூலவா் சன்னதி முன்பு அன்னம் பரப்பிவைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு அன்னமானது அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள சிவன் சன்னதியிலும் செவ்வாய்க்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.