கடலாடி அருகே முன்விரோதத் தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேரை கடலாடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ.புனவசால் கிராமத்தைச் சோ்ந்த வில்வத்துரை மனைவி முத்துலெட்சுமி.
இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த செல்லப்பாண்டியன் மகன் முருகையா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
முருகையாவின் உறவினரின் வயலில் முத்துலெட்சுமியின் கோழி மேய்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமியை முருகையா, அவரது மனைவி முருகாயி, மகள் கவிதா ஆகிய மூன்று பேரும் சோ்ந்து கட்டையால் தாக்கினராம். இதில் முத்துலெட்சுமி தலையில் பலத்த காயமடைந்து கடலாடி மருத்துவமனைவியில் சிகிச்சை பெற்று வருகினாா். இது குறித்து முத்துலெட்சுமி கடலாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் முருகையா, முருகாயி, கவிதா ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.