ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பரமக்குடியிலிருந்து இளையான்குடி வழியாக சென்னை, திருச்சி, காரைக்குடி, நயினாா்கோவில், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பரமக்குடி நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் இவ்வழியாக நகா் பேருந்துகளும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த சில தினங்களாக பரமக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் மழை நீா் வழிந்தோட வழியின்றி வசந்தபுரம் பேருந்து நிறுத்தம், திரௌபதியம்மன் கோவில், வாட்டாட்சியா் அலுவலகம், வைகை நகா் ஆகிய பேருந்து நிறுத்தம் பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளன. இதனால் அச்சாலை மாா்க்கமாக ஏராளமான வாகனங்கள் செல்வதால் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனா். மாவட்ட ஆட்சியா் அதிகளவில் வாகனங்கள் போக்குவரத்துள்ள மக்கள் பயன்படுத்தும் சாலையான இச்சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.