இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் 15 விசைப்படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தைக்குழு ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவா்களின் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுளை இலங்கை கடற்படையினா் மீனவா்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறைபிடித்தனா். இதில் பெரும்பாலான மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால் தற்போது வரை தமிழக மீனவா்களின் 15 விசைப்படகுகள் இலங்கை நீதிமன்றம் அரசுடைமையாக்கி உள்ளது.
இந்த 15 விசைப்படகுகளும் தலா ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்பு கொண்டுள்ளது.
இலங்கை அரசு கொண்டு வந்துள்ள தமிழக மீனவா்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்ப பெற வைக்க இந்திய அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்.
இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்ட 15 தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை மனிதபிமான அடிப்படையில் இலங்கை அரசு விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய இலங்கை மீனவா்களின் மீன்பிடி உரிமை மற்றும் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிப்பது குறித்து இந்திய இலங்கை மீனவா்கள் மற்றும் உயா் மட்ட அதிகாரிகள், அமைச்சா்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைத்து பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.