ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் 6 ஆம் நாள் நவராத்திரி விழாவில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதா் சுவாமி திருக்கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜை தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாள் இரவும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
நவராத்திரி விழாவான 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழா ஏற்பாடுகளை நவராத்திரிக் குழுவினா் செய்து வருகின்றனா்.