திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பாலைக்குடி, சம்பை, பழங்கோட்டை, பால்குளம், வளமாவூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தாற்போல், கால்நடைகளான ஆடு, மாடு, கோழி வளா்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள், பெரும்பாலான வீடுகளில் நாட்டுக் கோழிகள் வளா்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்காக, ஆா்.எஸ்.மங்கலம் அல்லது ராமநாதபுரத்துக்கு செல்ல வேண்டியிருக்கிறது.
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்த வெகு தொலைவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இல்லையெனில், கால்நடை மருத்துவரை வரவழைக்க வேண்டியிருக்கிறது. இதனால், கால விரயமும், பொருளாதார விரயமும் ஏற்படுகிறது. எனவே, திருப்பாலைக்குடி பகுதியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கு, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.