ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள அரியமான் கடற்கரையில் தூய்மைப்பணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை மாலை தொடக்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திரமோடி, அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி தூய்மையே சேவை விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடக்கி வைத்துள்ளார்.
அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
முதல் கட்டமாக அரியமான் கடற்கரையில் நடந்த தூய்மை சேவை விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னிட்டு கடற்கரையில் கிடந்த குப்பைகள், நெகிழிப் பொருள்களை ஆட்சியர் நேரடியாக சேகரித்தார். முன்னதாக அவரது தலைமையில் "பிளாஸ்டிக் ஒழிப்பு" உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்ஸி லீமா அமாலினி, உதவி திட்ட அலுவலர்கள் கண்ணன், முருகேசன், கிருஷ்ணகுமார், சரவண பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.