ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் வியாழக்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 5 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெண்களின் முழக்கொட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை முளைப்பாரிகளை கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று அரசூரணியில் கரைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.