மானாவாரி நெல் சாகுபடி உழவுக்கான மழை பெய்து வருவதால் விதை விதைக்கும் கருவிகள் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து நயினார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கே.விபானுபிரகாஷ் கூறியது:
நயினார்கோவில் ஒன்றியம் ராதாப்புளி, பாண்டியூர், சின்னஅக்கிரமேசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி நெல் விதைப்புப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். விதை விதைப்பு கருவி மூலம் விதைப்பதால் பயிர்களை சரியான எண்ணிக்கையில் பராமரிக்க முடியும்.
ஏக்கருக்கு 16 கிலோ நெல் விதை போதுமானது. வரிசையாக பயிர்கள் சரியான இடைவெளியில் முளைக்கும். மேலும் பயிர்களின் ஊடே களை எடுக்கும் பணி, உரமிடுதல், பயிர் பாதுகாப்பு போன்ற பணிகள் செய்ய ஏதுவாக அமையும். இவ்வாறு விதைப்பு செய்வதால் பயிர்கள் விரைவாக வளர்ச்சி பெற்று, கதிர்கள் கூடுதலாக வரபெற்று 10 நாள்களுக்கு முன்பே அறுவடைக்கு வந்துவிடும். மகசூலும் கூடுதலாக கிடைக்கும்.
நேரடி நெல் விதைப்பு செய்யு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. தற்போது நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தில் 110 நாள் வயதுடைய 1051 நெல் ரகம் போதுமான அளவு இருப்பு உள்ளது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை விதைக்கும் கருவியை பயன்படுத்தி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விதைப்பு பணியை நிறைவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.