ராமநாதபுரம் பகுதிகளில் விதிமீறி மணல் அள்ளிய 6 லாரிகள் பறிமுதல்
ராமநாதபுரத்தில் விதியை மீறி மணல் அள்ளியதாக 6 டிப்பர் லாரிகளை போலீஸார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் சுற்றுச்சாலை பகுதியில் தனியார் பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே விதியை மீறி சிலர் மணல் அள்ளுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் அப்பகுதியில் புதன்கிழமை திடீர் சோதனையிட்டபோது, 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புத்தனேந்தல் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
பஜார் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட நயினார்கோவில் சாலையில் விதியை மீறி மணல் அள்ளியதாக ஒருவர் மீது வழக்குப்பதிந்து டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மணல் அள்ளியது தொடர்பாக பெருங்களூருவைச் சேர்ந்தவர் மீது வழக்குப்பதிந்த போலீஸார் லாரியையும் பறிமுதல் செய்தனர். தொருவளூர் பகுதியில் மணல் அள்ளியதாக ராஜா என்பவர் மீது வழக்குப்பதிந்த போலீஸார் அவர் விட்டுச்சென்ற லாரியைப் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவு மட்டும் விதியை மீறி மணல் அள்ளியதாக 6 லாரிகளைப் பறிமுதல் செய்த போலீஸார் 6 பேர் மீது வழக்குப்பதிந்தும் உள்ளனர். மேலும், இதுதொடர்பாக வட்டாட்சியர் நடவடிக்கைக்கும் போலீஸார் பரிந்துரைத்துள்ளனர்.