இமானுவேல் நினைவு தினத்தில் அரசு விதிமுறைகளை மீறியதாக முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் மீது இளஞ்செம்பூர் மற்றும் முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பரமக்குடியில் அஞ்சலி செலுத்தச் சென்றனர். அப்போது வீரம்பல் கிராமத்தில் ஜாதி தலைவர்களின் பதாகைகள் அமைத்தும், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், 144 தடை உத்தரவை மீறி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக முதுகுளத்தூர் வட்டாட்சியர் ஜெயக்குமார் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஞானஒளி, மெர்லின், ஜெய்சிங், கிளிண்டன், அலெக்ஸ், விமலா ஆகிய 6 பேர் உள்பட மற்றும் பலர் மீது இளஞ்செம்பூர் மற்றும் முதுகுளத்தூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்தனர்.