இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்ததால், மீனவர்கள் செவ்வாய்க்கிழமை நஷ்டத்துடன் கரை திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 5 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியத்தனர்.
விசைப்படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால் செவ்வாய்க்கிழமை வெறும் கையோடு கரை திரும்பியதாக வருத்தத்துடன் கூறினர்.