மண்டபம் துணை மின்நிலையத்தில் உள்ள உயர் மின்அழுத்த மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக, ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 3 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மின்வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடலோரப் பகுதிகளான ராமேசுவரம், மண்டபம் துணை மின்நிலையங்களில் அடிக்கடி உயர் மின் அழுத்த இணைப்புகளில் பழுது ஏற்படுகிறது. இதனால், பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டாலும் முறையாக பதிலளிப்பது இல்லை.
இந்நிலையில், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரத்தில் 15 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை மீண்டும் மண்டபம் துணை மின்நிலையத்தில் உயர் மின்அழுத்த மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகினர்.
எனவே, இந்த இரண்டு துணை மின்நிலையங்களில் உள்ள உயர் மின் அழுத்த மின்மாற்றிகள் மற்றும் உயர் மின் அழுத்த கம்பங்களில் உள்ள இன்சுலேட்டர்களை ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.