உப்பூரில் ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா உப்பூரில் தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவில் ஜவுளி பூங்கா தொடங்க உத்தேசித்து உள்ளது.
இது சம்பந்தமாக உப்பூர் மோர்பண்ணை, திரப்பாலைக்குடி, புதுபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தொண்டியில் தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். இந்த ஜவுளி பூங்கா அமைவதால் சாலைகள் விரிவடையும், கடல் நீர் குடிநீராக மாற்றம் செய்யப்படும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஜவுளி பூங்கா அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் ஏற்கெனவே உப்பூர் அனல் மின் திட்டம் தொடங்க இருந்தபோதும் கூறினர்.
ஆனால் பல கிராமங்களும் விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டது தான் மிச்சம். கிராம மக்களுக்கு எந்தவித வேலையும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. மேலும் ஜவுளி பூங்கா தொடங்கினால் இப்பகுதியில் சாயப்பட்டறைகள் தொடங்கப்படும்.
அதனால் ஏற்படும் கழிவுகள் கடலில் கலந்து மீன்கள் உயிரிழந்து கடல் வளம் பாதிக்கப்படும். அதனால் மீனவர்களும் அதனை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி ஜவுளி பூங்கா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து மீனவர்கள், விவசாயிகள் என ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.