ராமநாதபுரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மர்ம நபரால் புதன்கிழமை அதிகாலையில் அடித்துக் கொல்லப்பட்டார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள எல்.கருங்குளத்தைச் சேர்ந்தவர் முத்துராக்கு (61). இவர் பாம்பன் ரயில் நிலையத்தில் கொத்தனாராகப் பணிபுரிந்து சில மாதங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் செவ்வாய்க்கிழமை இரவு கருங்குளம் அருகேயுள்ள லாந்தைகாலனி கன்னணை எனும் ஊரில் நடைபெற்ற கோயில் முளைக்கொட்டு திருவிழாவுக்குச் சென்றுள்ளார். திருவிழாவில் நடந்த நாடகத்தைப் பார்த்தவர் தூக்கம் வந்ததால் அருகிலிருந்த உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில், புதன்கிழமை அதிகாலையில் முத்துராக்கு தலையில் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு அருகில் கடப்பாறை கிடந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே மர்ம நபர் கடப்பாறையால் தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவரை மீட்டு ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முத்துராக்கு அணிந்திருந்த மோதிரம் மற்றும் அவர் பையில் இருந்த பணம் ஆகியவற்றை காணவில்லை என உறவினர்கள் கூறினர். இதுதொடர்பாக கருங்குளம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (27) என்பவரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர். முத்துராக்கு தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது மோதிரத்தை மதன்குமார் கழற்ற முயன்றுள்ளார். அப்போது முத்துராக்கு விழித்துக்கொண்டதால் ஏற்பட்ட மோதலில் அவரை கடப்பாறையால் அடித்துக்கொலை செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.