சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி ஸ்ரீ உமைய நாயகி அம்மன் கோயில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் போட்டியில் கலந்து கொண்டன. மாடுகளை பிடிக்க வெளி ஊர்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் 15 காளைகள் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிடம் விளையாட அனுமதிக்கப்பட்டது. காளைகளை அடக்க 20 பேர் கொண்ட குழுவினர் களமிறக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்பே அனுமதி வழங்கப்பட்டது. இந்தப்போட்டியில் சீறிப்பாய்ந்து விளையாடி வெற்றிபெற்ற காளைகளுக்கும் வீரத்துடன் அதன் திமிலை பிடித்து அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த போட்டியை காண சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.