கமுதி அருகே மழை பெய்ய வேண்டியும், விவசாயிகள் உடல் ஆரோக்கியம் பெற்று, விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க வேண்டும் என, பக்தர்கள் புதன்கிழமை உடலில் சேறு பூசி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கமுதி அருகே உள்ள செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளாள புதன்கிழமை சிறுவர்கள்
உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், செண்டை மேளம் முழங்க, தங்களது உடல் முழுவதும் களிமண் சகதியை பூசிக்கொண்டு, வினோதமான முறையில், உடலில் சேறு பூசியும், அக்னி சட்டி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தி, கரும்பாலை தொட்டில்கள் உள்பட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், விவசாயிகளுக்கு இந்த ஆண்டு போதிய மழை பெய்து, அதிக மகசூல் கிடைக்க வேண்டும் என்பதற்காக, செங்கப்படை அழகுவள்ளியம்மனுக்கு, உடலில் சேறு பூசி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகிறோம்.
இத்திருவிழாவுக்காக, வெளி மாநிலம், வெளிநாடு, வெளியூர்களில் வசிப்பவர்கள் ஊருக்கு வந்து, நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி செல்வது பாரம்பரியமாக தொடர்கிறது, என்றனர்.