ராமநாதபுரம் நீதிமன்றத்தில் போலி சான்றிதழ்கள் வழங்கி ஜாமீனுக்கு முயற்சித்த வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, இருவரை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் விஜயாலயபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (57). வேலூர் மாவட்டம் சத்தியமங்கலம் காக்காம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (51). இவர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தங்களது உறவினரை ஜாமீனில் விடுவிக்க, பிணையாளியாக வந்துள்ளனர்.
அதற்கான சான்றிதழ்களை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண். 2 இல் வழக்குரைஞர் வினோத் மூலம் சமர்பித்துள்ளனர். நீதிமன்ற விசாரணையில் அவர்கள் போலியான சான்றிதழ்களை வழங்கி ஜாமீன் பெற முயற்சித்தது தெரியவந்தது. அதனையடுத்து கோவிந்தன், ராமலிங்கம், வழக்குரைஞர் வினோத் ஆகியோர் மீது நீதிமன்ற தலைமை எழுத்தர் வி.நடராஜன் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், கேணிக்கரை போலீஸார் போலிச் சான்றிதழ் மூலம் ஜாமீனுக்கு முயற்சித்த 3 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் கோவிந்தன் மற்றும் ராமலிங்கத்தை போலீஸார் கைது செய்து, ராமநாதபுரம் சிறையில் அடைத்ததனர்.