ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி-நயினார்கோவில் பகுதிகளில் வியாழக்கிழமை பழத்த மழை பெய்தது. இதனால் வயல் வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மானாவாரி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பரமக்குடி வட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இம்மழையினை பயன்படுத்தி மானாவாரி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள் கடந்த சில தினங்களாக டிராக்டர்கள் மூலம் உழவுப்பணி மேற்கொண்டு நெல் விதைப்பு செய்து வந்தனர். இதுபோன்ற நெல் விதைப்பு செய்து வந்த நிலையில் வியாழக்கிழமை வயல் வெளிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் வகையில் பலத்த மழை பெய்தது. இதனால் நெல் பயிர் நல்ல முளைப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நெல் விதைப்புக்கும் தற்போது பெய்துள்ள மழையானது சிறந்ததாக உள்ளது.
இதனால் உழவுக்கான ஈரப்பதத்தை அறிந்து விவசாயிகள் நெல் விதைப்பு செய்யும் பணியிலும் ஈடுபடவுள்ளனர். பரமக்குடி நகர் பகுதியில் பெய்த மழையால் பொன்னையாபுரம்-பாலன் நகர் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் பாதையாக இங்குள்ள ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
இதனால் மழை நீர் செல்லாமல், மேல்கூரை அமைத்து, கழிவுநீர் கால்வாய்களிலிருந்து வரும் தண்ணீர் இச்சுரங்கப்பாதைக்குள் செல்லாமல் தடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.