கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா குறித்து மூவேந்தர் பண்பாட்டு கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கமுதி பசும்பொன்னில் வரும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது ஜயந்தி விழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு கமுதி வட்டார மூவேந்தர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் கூட்டம் தேவர் திருமண மண்டபத்தில், கமுதி வட்டார தலைவர் என்.முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் டி.திருமால், மாவட்டத் தலைவர் பாண்டியன், முன்னாள் தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாள்கள் விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்கள் குருபூஜை, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜயந்தி விழா மற்றும் குருபூஜை விழா ஆகியவற்றை பொங்கல் வைத்து, ஊர்வலம் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
கமுதி குண்டாறு பாலம் அருகே அமையவிருக்கும் சுற்றுவட்டச் சாலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்க வேண்டும். கமுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேணடும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 50 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.