முதுகுளத்தூர் காமராஜர் நகர் சார்பில் செக்கடி முனீஸ்வரர் கோயில் 32 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கிராமத் தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். விழாவில் செக்கடி முனீஸ்வரர் கோயிலில் கிராமப் பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபட்டனர்.கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.
மாலையில் பெண்கள் மற்றும் நகரப் பிரமுகர்கள் காமராஜர் நகரில் இருந்து பூத்தட்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜர் நகர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.