ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வில் 1,818 மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இத்தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,122 மாணவ, மாணவியருக்கு தேர்வு அறை நுழைவுச்சீட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுக்கு 1,818 மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். 304 மாணவ, மாணவியர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வுக்காக மாவட்டத்தில் 8 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காரைக்குடி: ஊரகத் திறனாய்வுத் தேர்வு, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்வை எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித்தொகையாக அரசு சார்பில் வழங்கப்படும். இந்தத் தேர்வை, சிவகங்கை மாவட்டத்தில் 2,003 பேர் எழுதினர். இதில், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் மட்டும் 440 பேர் எழுதினர்.
காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில், தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில், பள்ளியின் தலைமையாசிரியர் லெ.பழனியப்பன், ஆசிரியர் வி. சுந்தரராமன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.