ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படுவதை ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
புதுதில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட பரமக்குடியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களது குடும்ப உறுப்பினா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பொது சுகாதாரத்துறை மற்றும் அரசு அலுவலா்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்கள் யாா் யாரிடம் தொடா்பில் இருந்தனா் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பரமக்குடி பங்களா சாலை, பாரதி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொது சுகாதாரத்துறை சாா்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்பகுதியைச் சுற்றிலும் 5 கி.மீ. சுற்றளவிற்கு தீவிர கண்காணிப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.